
இயேசுவை ஏற்றுக்கொள்ளுதலின் விளைவு
லூக்கா-19: 6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். And he made haste, and came down, and received him joyfully.
‘ஏற்றுக்கொள்ளுதல்’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று அங்கீகரித்துக்கொள்ளுதல், மற்றொன்று வரவேற்றல். சகேயுவைக் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம். சமுதாயத்தில் யூதர்களால் வெறுப்போடு பார்க்கப்பட்ட இவன், பாவியென்று அழைக்கப்பட்ட இவன், இயேசுவைக் குறித்துக் கேள்விட்டு அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இயேசுவைப் பார்த்தாலே போதும் என்று ஆசைப்பட்ட சகேயுவுக்கு, அவன் வீட்டிலே தங்க வேண்டும் என்ற விருப்பத்தை இயேசு தெரியப்படுத்துகிறார். உடனே அவன் அவரை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டான் என்று நாம் பார்க்கிறோம். சகேயு இயேசுவை ஏற்றுக்கொண்டதால் என்ன மாற்றம் நடைபெற்றது என்பதை நாம் இங்கே பார்க்கவிருக்கிறோம். இதைக் கேட்கிற உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்கெனவே இயேசுவை ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால் அதனால் ஏற்படும் பலன்களை அறிந்து பெலப்படுங்கள். ஒருவேளை யாராவது இன்னும் இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்களாக இருப்பீர்களானால் இன்றைக்கு அவரை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கப்படுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
லூக்கா-19: 8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ‘ஆண்டவரே என்றான்’.
1. இயேசுவை ஆண்டவர் என்று அழைத்தான்:
‘ஆண்டவர்’ என்றால் என்னை ஆளுகை செய்பவர், என் ஆராதனைக்கு உரியர், நீரே என் தெய்வம் என்பதை அறிந்து அங்கீகரிப்பதாகும். இதுவரை எதையோ தெய்வம் என்று நம்பி வாழ்ந்த சகேயு இனி இயேசுதான் தன் தெய்வம் என்று அறிந்துகொண்டுவிட்டான். கர்த்தராகிய ‘இயேசுவை ‘நீரே என் ஆண்டவர்’ என்று உன் நாவினால் அறிக்கைசெய்து தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்’ என்று தேவன் சொல்லியிருக்கிறார் (ரோமர்-10: 9-10). பிலிப்பியர்-2: 11ல் இயேசு கிறிஸ்து கர்த்தரென்று (ஆண்டவரென்று) நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கு, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் என்று வாசிக்கிறோம். இயேசுவே நம்முடைய ஆண்டவராக இருப்பாராக!
லூக்கா-19: 9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.
2. இரட்சிப்பு என்ற அன்பளிப்பு:
ஒரு நபர் இயேசுவை தன் அண்டவராக ஏற்றுக்கொள்ளுமபொது தேவன் கொடுக்கும் அன்பளிப்பு என்ன தெரியுமா? இரட்சிப்பு.
இரட்சிப்பு என்றால்:
- பாவங்கள் மன்னிக்கப்படுதல்,
- தேவனுடைய பிள்ளை என்ற உரிமையைப் பெறுதல்,
- சாத்தானுடைய ராஜ்யத்தினின்று விடுவிக்கப்படுதல்,
- தேவனுடைய சகல ஆசீர்வாதங்களுக்கும் பங்காளியாகுதல்,
- நித்திய தேவனுடன் நித்திய நித்தியமாக இணைக்கப்பட்டிருக்கும் பாக்கியத்தைப் பெறுதல் என்று பொருள்படும்.
பலரால் பாவியாகப் பார்க்கப்பட்ட சகேயு இரட்சிக்கப்பட்ட பாக்கியத்துக்குரியவனாக மாறினான். இயேசுவை ஏற்றுக்கொண்டதன் விளைவு தேவனுடைய பார்வையில் அவருக்குப் பிரியமானவனாக அவனை மாற்றியது.
லூக்கா-19: 8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்றான்.
3. ஏழைகள் மேல் மனதுருக்கம்:
இயேசு உள்ளே வரும்போது இயேசுவின் சுபாவம் உள்ளே வர ஆரம்பித்தவிடுகிறது. ஏனக்குள்ளே இயேசு இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு இயேசுவின் சுபாவத்திற்கும் தங்களுடைய சுபாவத்திற்கும் சம்பந்தமே இல்லாத வாழ்க்கை வாழ்வது சரியான முறையல்ல. கொடூரத்தன்மை, காட்டுமிராண்டித் தனம், பிறரைக் குறித்த கரிசனை இல்லாமை, ஆணவம், அகங்காரம் இப்படி எத்தனையோ காரியங்களைச் சொல்லலாம். சகேயுவுக்குள் இயேசு வந்ததால் இரட்சிப்பு வந்தது, இரட்சிப்பு வந்ததால் சுபாவம் மாறியது. ஏழைக்ளுக்குக் கொடுப்பவர்கள் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது (நீதி-19: 17) ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். வாங்கியே பழக்கப்பட்டிருந்த சகேயு கொடுக்கிற இருதயத்தைப் பெற்றுகொக்ண்டதைப் பார்க்கிறோம். இரக்ககுணம் நியாத்தீர்ப்பின் நாளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். யாக்கோபு-2:13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும், நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் (மகிழ்ந்து களிகூரும்).
கோர்நேலியுவின் வாழ்க்கை: (அப்-10: 2)
அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
புறஜாதியாக இருந்த கொர்நேலியு தானதர்மம் செய்தது தேவனால் நினைவுகூரப்பட்டது என்று நாம் பார்க்கிறோம் (10: 4). ஏழை எளியவர்களைக் குறித்து நமக்குள்ளே மனதுருக்கம் இருக்க வேண்டும் என்பதை தம்முடைய வார்த்தைகளில் தேவன் தெளிவுபடுத்துகிறார். இயேசு பூமியில்
வாழ்ந்தபோது மனதுருக்கம் உள்ளவராக வாழ்ந்தார். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்றும் அவர் கற்றுக்கொடுத்தார்.
லூக்கா-19: 8 நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
4. இழப்பை ஈடுகட்டுதல்:
பிறரை ஏமாற்றிச் சேர்த்தவைகள் நியாயமற்றவைகள் என்று சகேயு அறிந்துகொண்டான். பிறரை வஞ்சித்து நாம் பெற்றிடும் வருமானம் எந்தவிதத்திலும் நல்லது அல்ல. உண்மையாகச் சம்பாதித்தல், உழைத்துச் சம்பாதித்தல், நேர்மையாகச் சம்பாதித்தல் போன்றவைகள் தான்
தேவனால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொடுப்பதாக இருக்கிறது. சகேயுவுக்குள் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமானதாக இருக்கிறது. உயிருள்ள தேவனால் தான் உண்மையான மாற்றம் கொண்டுவரப்பட முடியும். நம்முடைய வாழ்வில் உயிருள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம்
என்பது உண்மையென்றால், தீமையான வாழ்க்கை முறைக்கு நாம் தூரமாக்கப்படும் பாதையில் தேவன் நம்மை நடத்திச் செல்வாராக. நம்மால் யாராவது ஏமாற்றப்பட்டிருப்பார்களானால், நஷ்டமடைந்திருப்பார்களானால் நாம் அதை அவர்களுக்குத் திரும்பச் செலுத்தி தேவ அன்பை அவர்களுக்குக் காட்டுவோமாக!
பெத்தானியாவிலே:
லூக்கா-10: 38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
மார்த்தாள் இயேசுவை வரவேற்ற சம்பவம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அது அவர்கள் வீட்டில் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ளக் காரணமாயிருந்தது. அந்த ஊரில் எத்தனையோ வீடுகள் இருந்தும் அந்த வீடுகளுக்கெல்லாம் இயேசு செல்லவில்லை, மாறாக தன்னை ஏற்றுக்கொண்ட, வரவேற்ற வீட்டுக்குத் தான் இயேசு சென்றார். இந்த மார்த்தாள் மரியாள் வீட்டில்தான் மரித்த லாசருவை இயேசு உயிரோடு எழுப்பினார்.
சகேயுவின் வாழ்க்கை நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இயேசுவை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அழைத்துக் செல்லுதல் நம்முடைய வாழ்வை பரிசுத்தப்படுத்தி, மாற்றியமைப்பதற்கு அவசியமானதாக இருக்கிறது.